Tamil Community

உணர் மணம் - 3

*உணர் மனம்* என்றால் என்ன,   *முழு மனம்* என்றால் என்ன என்பதை ஒரு தொடராகப் பார்த்து வருகிறோம்.


முழு மனதின் அங்கமாக, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவை இடம் பெற்றிருப்பதைப் போல்,


உணர் மனதிலும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் நால்வகை அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

*******அட்டவணை******

மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் இந்த நால்வகை அம்சங்களும் முழு மனதிலும் உள்ளன; உணர் மனதிலும் உள்ளன.


இவை முழு மனதில் செயல்படும்போது பிரித்துப் பார்க்கமுடியாத வகையில் மொத்தமாகச் செயல்படுகின்றன.


அங்கு, தாமாக நடக்கும் செயல் மட்டுமே உள்ளது. தடுமாற்றம் இல்லாத செயல் மட்டுமே உள்ளது.


உணர் மனதைப் பொருத்த அளவில் அங்கு புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய வற்றுக்கென தனிப்பட்ட செயல்கள் இருக்கின்றன.

 ஆயினும் அவை தலா 10% சக்தியை மட்டுமே உடையவையாக உள்ளன. ஆகையினால் அவை முழு மனதிலிருப்பதைப் போன்ற சக்தி உடையவையாக இல்லை.


உணர் மனதைப் பொருத்த அளவில்  உணருந்தன்மை தான் பிரதான அம்சமுடையது. அது மிகவும் அழகானது. கள்ளங்கபடமற்றது.


அது உலகையும், நம்மையும் ஒன்றாக இணைக்கிறது.


உணருந்தன்மை 70% சக்தியுடையதாக இருந்தபோதிலும்,


 அது, எதற்கு வேண்டுமானாலும், தன்னை விட்டுக் கொடுக்கும் தன்மையில் உள்ளதால்,


 புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் 30% க்குத்  தன்னை விட்டுக் கொடுத்து விடுகிறது.


அடங்கிப் போக வேண்டிய அந்த மூன்றும், பலவகையான பிரச்சினைகளுக்கும் காரணமாகி விடுகின்றன.


 மேலும் நாம் ஆய்ந்திடுவதற்கு முன்னால்


 மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்றால் என்ன என்பதையும் அவற்றின் செயல்பாட்டையும் ஒரு முறை பார்த்து விடுவோம்.


மனம் என்பது சாதகபாதகமான பல செய்திகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொடுக்கும் ஓர் ஆலோசகர் மட்டுமே.


 தேவையானவற்றையும், தேவையில்லாத வற்றையும் கூட அவர் காட்டி விடுவார்.


 அவர் எடுத்துக் கொடுக்கும் தகவல்கள் அனைத்தையும் வகைப்படுத்தி நமக்குத் தேவையான முடிவினை எடுப்பதுதான் புத்தி.


 புத்தி எடுக்கும் முடிவானது நமது சித்தத்தில் பிரதிபலிக்கும் போது அதற்கேற்ற உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன.


அப்படி விளைவாக வெளிப்படும் உணர்ச்சிகளே அகங்காரம் எனும் பெயரைப் பெறுகிறது.


நமக்கு ஏற்படும் உணர்ச்சிகளுக்கு ஏற்ப நாமும் நமது செயல்களை மேற்கொள்கிறோம்.


 இங்கு பிரச்சினை எவ்வாறு உருவாகிறது?


 நமக்கு ஏற்படும் பிரச்சினைக்கு எது காரணம்?


 நாம் எடுக்கும் பொறுப்புகள் தாம் சுமையாக இருந்து நம்மை அழுத்துகின்றன.


 பொறுப்பை உருவாக்குவது யார்?


 பொறுப்பைச் சுமப்பது யார்?


 நமது முழு மனதே நமது செயல்கள் அனைத்தையும் செய்து முடித்தாலும்


 அது எந்தப் பொறுப்பையும் எடுத்துச் சுமப்பதில்லை.


 செயல் மட்டுமே அங்கு இருக்கிறது. செயல்படுவது மட்டுமே முழு மனதின் வேலை.


 பொறுப்புகளைச் சுமப்பது முழு மனதின் வேலை யல்ல.


 உணர்மனதுதான் பொறுப்புகளைச் சுமந்து திண்டாடி விடுகிறது?


 அது எவ்வாறு பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறது?


உணர் மனதின் எந்தப் பகுதி இவ்வாறு பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறது?


உணர் மனதின் பெரும்பாலான அம்சமான உணருந்தன்மை தான் இந்தப் பொறுப்பைச் சுமக்கிறதா?


 அது ஒரு கள்ளங்கபடமற்ற குழந்தை என்று பார்த்தோம். அதனால் அது எந்தப் பொறுப்பையும் எக்காலத்திலும் எடுப்பதில்லை. அது எடுப்பார் கைப்பிள்ளை என அனைத்தோடும் இணைந்து கொள்கிறது.


 ஆகவே அது நமது பொறுப்புகளைச் சுமப்பதில்லை. 


 அப்படியானால் பொறுப்பைச் சுமப்பது யார்?


 நம்முடைய நான் என்னும் அகங்காரந்தான் , *என்னால் முடியும்*,   *நான் செய்வேன்* என்று கூறி பொறுப்புகளை எடுத்துச் சுமந்து கொள்கிறதா?


அப்படிதான் தோன்றுகிறது.


*நான்* எனும் அகங்காரத்தைப் பற்றியும் சற்று ஆய்ந்திடுவோம்.


 அகங்காரம் என்பது நமது மன இயக்கத்தின் நாலாவது அடுக்காக வருகிறது.


 சித்தத்தின் தொடர்பினால் நமக்கு ஏற்படும் மனோ அனுபவங்களை நாம் அகங்காரம் என்ற பெயரிட்டு அழைக்கிறோம்.


 மனோ அனுபவங்கள் அனைத்தும் வெளிப்பாடுகள் மட்டுமே.


 அந்த வெளிப்பாடுகள் மகிழ்ச்சியாக இருக்கலாம் அல்லது வருத்தமான உணர்ச்சிகளாக இருக்கலாம்.


 அவை எத்தகைய உணர்ச்சிகளாக இருந்தாலும் கூட அவை அனைத்தும் இயற்கையாகத் தோன்றியவையே. அவை அனைத்தும் அழகானவையே.


 நம்மிடம் வெளிப்படும்  அத்தனை உணர்ச்சிகளுமே *அகங்காரம்* என்ற பெயரைத் தாங்கி யிருந்தாலும் அவை அனைத்தும் அழகானவையே.


 நாம் இருக்கிறோம் என்பதற்கு அடையாளமே நமது மனோ உணர்வுகள் தாம்.


 அவை இயற்கையான முறையில் கணந்தோறும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.


அவை அப்படி ஏற்படுவதுதான் சரியானது. அவையும் அப்படித்தான் ஏற்பட்ட வாறும் உள்ளன.


 நாம் நமது பொறுப்புகளைச் சுமப்பதற்கு 


நம் மனதின் பிரதான அம்சமான உணருந்தன்மை காரணமில்லை எனப் பார்த்து விட்டோம்.


 அகங்காரமும் காரணமில்லை என்று பார்த்து விட்டோம்.


 நமது பொறுப்புகளைச் சுமந்து துன்பப்படுவது நமது இயல்புகளாக இருக்கும் நமது *சித்தமா?*


 நமது இயல்புகள் அனைத்தும் நமது மனப் பதிவுகளே.


- நமது மனதின் இயற்கையான கட்டமைப்பு மட்டுமே.


 அவை அனைத்தும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் *இயந்திர கதியாக* இயங்கி மட்டுமே செயல்படுகிறது.


 பொறுப்பை ஏற்றுச் செயல்படும் அமைப்பு எதுவும் அங்கு கிடையாது.


 உணர் மனதின் நான்கு பகுதிகளான, உணருந் தன்மை, புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றில் புத்தியைத் தவிர அனைத்தையும் பார்த்துவிட்டோம்.



*புத்தி*  இந்த உணர் மனதில் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் பார்த்துவிடலாம்.


உணர் மனதிலும் புத்தி இருக்கிறது; முழு மனதிலும் புத்தி இருக்கிறது.


 முழு மனதின் புத்தி, சக்தி வாய்ந்தது. அதனால் தீர்க்கமான எந்த முடிவையும் அந்த புத்தியினால் எடுக்க முடியும்.


 ஆனால் உணர் மனதின் புத்தி மிகவும் பலவீனமானது. வெறும் 10 % சக்தியை மட்டுமே உடையது.


 தீர்மானமான முடிவை அதனால் எடுக்க முடியாத காரணத்தினால் அதுவே ஒவ்வொன்றையும், வேண்டும் அல்லது வேண்டாம் என, மாற்றி மாற்றித் தேர்வு செய்ய ஆரம்பித்து விடுகின்றது.


உணர் மனதின் இத்தகைய புத்தியின் காரணமாகவே, உணர் மனம்,  *மனம்* என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.


 அலைபாயும் தன்மை உடையதாகவே நமது மனம் விவரிக்கப்படுகிறது. அதற்கு உணர் மனதின் பகுதியாக இருக்கும் புத்தியே காரணமாக இருக்கிறது.


அப்படியானால், உணர் மனம் பொறுப்புகளைச் சுமப்பதற்கான காரணம், அதிலிருக்கும் புத்தி தானா?


 புத்திதான் பொறுப்புகளை எடுத்து சங்கடப் படுகிறதா?


 அப்படியும் கூறிவிடலாம்.


 ஆனால் புத்தி மட்டுமே முழுமையான காரணமல்ல.


 நமக்கு ஏற்படும் இன்பமான மற்றும் துன்பமான மன அனுபவங்களை,


" வேண்டும்" அல்லது "வேண்டாம்" என்ற நிலையில் தரம் பிரிப்பதன் மூலம் புத்தியானது


 அகங்காரத்தோடு இணைந்து கொள்கிறது.


 அனுபவங்கள் அனைத்தும் வேண்டிய அனுபவம் அல்லது வேண்டாத அனுபவம் என்ற தன்மையை எடுத்துக் கொள்கின்றன. 


உணர் மனதினுடைய வெளிப்பாடாக


 ஒவ்வொரு கணந்தோறும் ஏதாவது ஒரு மனோ அனுபவம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.


அகங்காரம் எனும் நமது மனோ அனுபவத்தை நமது புத்தியானது "வேண்டும்" அல்லது "வேண்டாம் "எனத் தேர்வு செய்யும் நிலையில்,


 நமது அகங்காரம் என்பது *மமகாரம்* என்ற தன்மையை அடைகிறது. 


மமகாரம் என்றால் *என்னுடையது* என்று பொருள்.


*கடமையைச் செய். பலன் மீது பற்று வைத்து பலனை எதிர்பாராதே*- என்ற உபதேசமுங் கூட இதற்குப் பொருந்தி வருகிறது.


 பலன் என்பது இங்கு மனோ அனுபவங்களையே குறிக்கிறது; அகங்காரத்தையே குறிக்கிறது.


 ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமக்குச் செயல் இருக்கிறது.


 சூழ்நிலையை அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்வதுதான், நாம் செயல்படுவதற்கான முதற்படி.


 சூழ்நிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்வது முதற்படி.


 அந்த சூழ்நிலையில் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்வது இரண்டாவது படி.


இவ்வாறு நமது புத்தி செயல்படுவதில் எந்தத் தவறும் கிடையாது.


*என்ன செய்ய வேண்டும்* என்பதற்குப் பதிலாக,


*என்ன விதமான அனுபவம் ஏற்படவேண்டும்*,


- என்ற ரீதியில் நமது புத்தி செயல்படுமேயானால்,


 அங்கு மமகாரம் உருவாகிவிடுகிறது.


உணர் மனதின் 70% ஆக இருக்கும் உணருந் தன்மையில் தவறு எதுவும் கிடையாது.


 என்ன நடந்துகொண்டிருக்கிறது எவ்வாறு செயல்பட வேண்டும் எனப் புரிந்து கொள்ளும் புத்தியிலும்  எந்தத் தவறும் கிடையாது.


 தனது இயற்கை அமைப்பில் சித்தம் இயற்கையாகச் செயல்படுவதிலும், அது பலவிதமான மன அனுபவங்களை இயற்கையாகவே  ஏற்படுத்துவதிலும் தவறு எதுவும் கிடையாது.


 அகங்காரம் என்று கூறக்கூடிய அனைத்து மனோ அனுபவங்களிலும் -  அகங்காரத்திலும் எந்தத் தவறும் கிடையாது.


புத்தியானது, மனோ அனுபவங்களுக்கு முக்கியத்துவமளித்து அவற்றைத் தேர்வு செய்யும் நிலையிலேயே, அகங்காரம் அனைத்தும் மமகாரமாக வடிவெடுத்து


 நமது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாகிவிடுகிறது.


 தனது தவறான அணுகுமுறை தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதை


 நமது புத்தி உணர்ந்திடும் போது,


 உணர் மனதின் புத்தியானது,


 முழு மனதின் புத்தியாக,


 உயர்வு பெறுகிறது.


 முழு மனதின் புத்தியானது செயலை மட்டுமே நிர்வாகம் செய்கிறது.


 அது மனோ அனுபவங்களை நிர்வாகம் செய்வதில்லை.


 மனோ அனுபவங்கள் அனைத்தையும், முடிந்து போன ஒன்றாகக் கருதி,


 செய்யவேண்டிய செயல்களுக்கு மட்டுமே நமது புத்தி வழிகாட்டுகின்றது.

Share:

0 $type={blogger}:

கருத்துரையிடுக

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

Main Tags

லேபிள்கள்